Saturday, 13 September 2025

எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் !


 

🇱🇰 எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற தாரகமந்திரத்தில் சளைக்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கை.

ரணில் கைது செய்யப்பட்டதன் காரணமாக, இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாகவும், அதற்கு எதிராக தாம் வீதிக்கு இறங்கி போராடப் போவதாகவும் எதிர்க்கட்சிகள் ஊளையிடத் தொடங்கியிருக்கின்றன.

ஊழல்களால் மாசுபட்ட மனிதர்களின் ஒரு கோர்வையாகவே, ரணிலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

“ரணில் ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன்” என்று தேர்தல் மேடைகளில் அவரை எதிர்த்து பேசிக் கொண்டு, தீப்பொறி கக்கி தமது அரசியல் அடிமைகளின் இரத்தத்தை சூடாக்கிய அரசியல்வாதிகள், இன்று ரணிலை பாதுகாக்க ஒரே அணியில் திரண்டிருப்பது மிகப் பெரிய வேடிக்கையாகவும், வெட்கக்கேடாகமவும் இருக்கிறது.

தோழர் அனுரகுமாரவின் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் குறித்து அதிருப்திகள், முரண்பாடுகள் இருந்த போதிலும், ஊழல் மோசடிகளால் வயிறு உப்பிய, இந்த நாட்டின் பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொள்ளையடித்த “ஊழல் பெருச்சாளிகள்” தக்க தண்டனை பெறவேண்டும் என்ற கருத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.

இந்த ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் தண்டனை கிடைக்கவே கிடைக்காது. காரணம், இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த திருட்டுக் கூட்டணிகள், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்த போதும் இருட்டில் கைகுலுக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டு தமது அரசியல் காய்களை நகர்த்தி வந்துள்ளனர்.

இந்த நாட்டை ஆண்ட ஜே.ஆர்., பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி, கோத்தா ஆகியோர் அனைவரும் சட்டத்தை துச்சமாக மதித்து, தமது இழிவான அரசியலை அரங்கேற்றியவர்களே. சதி அரசியலில் சதுரங்கம் ஆடியவர்களே. மக்களின் வியர்வையையும் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்தவர்களே. மக்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தவர்களே.

கடந்த காலங்களில், இந்த ஆட்சியாளர்கள் சட்டம் என்ற சாட்டையை தமக்கேற்றவாறு சுழற்றி வந்துள்ளனர். நீதித்துறையை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் தமது அரசியல் எதிராளிகளை காயப்படுத்தி இன்பம் கண்டுள்ளனர். வலிமையற்றவர்களை, குரலற்றவர்களை சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

“அரகலய” போராட்டத்தின் போது, பொலிஸாரால் வடிவமைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் “பொதுச் சொத்து சேதப்படுத்தல் சட்டத்தின் கீழ்” கைது செய்யப்பட்டு பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள்? அப்போது வாய் மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இன்று தமது “வர்க்கத் தலைவனுக்குக்” கிடைத்த தீர்ப்பை மட்டும் எதிர்க்க முன்வந்துள்ளனர்.

இன்று ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், கடந்த காலங்களில் நீதித்துறையை அதிகாரத்தின் மூலம் அச்சுறுத்தியவர்களோடு சேர்ந்து கும்மியடித்த குற்றவாளிகளே என மக்கள் கருதுகின்றனர். இவர்கள் இன்று ரணிலுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்குவது, எதிர்காலத்தில் தமக்கெதிராக வரவிருக்கும் நீதிமன்றச் செயற்பாடுகளில் இருந்து தப்புவதற்கே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்று ஜனநாயகம் குறித்து குரலெழுப்பும் சந்திரிக்கா அம்மையார், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான சரத் என். சில்வாவை, பிரதம நீதியரசராக நியமித்து நீதித்துறைக்கே தலைமை தாங்கும் உயரிய பொறுப்பை வழங்கினார். அப்போது சந்திரிக்காவின் இந்த நிதித்துறையை மாசுபடுத்திய எதேச்சதிகார செயற்பாட்டை யாரும் எதிர்க்கவுமமில்லை, அதற்கெதிராக மக்களை அணிதிரட்ட முன்வரவுமில்லை.

இன்று பொதுச் சொத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ரணிலை பாதுகாக்க வீதிகளுக்கு வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல்வாதிகள், அப்போது தமது நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌன விரதம் பூண்டிருந்தனர். சந்திரிக்காவின் அந்த கேவலமான அரசியலை, தனியாக நின்று கடுமையாக எதிர்த்தவர் விக்டர் ஐவன் மட்டுமே.
இலங்கையின் 41வது பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா, மஹிந்தவின் “ஹெல்ப்பின் ஹம்பாந்தோட்டை” மோசடி வழக்கில் மஹிந்தவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததாக பகிரங்கமாகவே அறிவித்தார். “அந்தத் தீர்ப்பை நான் வழங்காவிட்டால் மஹிந்த இன்று சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்” என்று பெருமையாகப் பேசியிருந்தார். வேலியே பயிரை மேய்ந்த கதையிது. நீதித்துறையில் தான் செய்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை பெருமையாக சொல்வதை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் அறிவு சூன்யங்கள் நிறைந்த நாடுதான் இலங்கை.

இலங்கையின் நீதித்துறைக்கே தலைமை தாங்கிய சரத் சில்வா, நீதித்துறையை களங்கப்படுத்திய அந்த செயற்பாடு இந்நாட்டின் எந்த அரசியல்வாதியையும் கொதிக்க வைக்கவில்லை. ஏனெனில், தமது அரசியல் வர்க்கத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதுகாப்பு கிடைத்ததால் எதிர்க்கட்சிகள் மௌனமாக இருந்தன.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தனது காட்டுத்தர்பார் ஆட்சிக்கு இடையூறாக இருந்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் காதைப் பிடித்து வெளியே வீசும் அளவிற்கு, இலங்கையின் நீதித்துறை களங்கப்பட்டிருந்தது. இன்று ரணிலின் கைது தீர்ப்பை விமர்சிக்கும் இக்கூட்டம், அப்போது மஹிந்தவின் அந்த இழிச் செயலுக்கு எதிராக உருப்படியாக எதையும் செய்யவில்லை.
இதேவேளை, நீதிமன்றத்தில் தமது நியாயத்தை முன்வைத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமை ரணிலுக்குக் கிடைக்க வேண்டியது அவசியம். அதை யாராலும் மறுக்க முடியாது. 

அவர் மீது பட்டலந்த படுகொலைகள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டுகள் இருக்கவே இருக்கின்றன.
எது எப்படியோ, ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதே. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதன் பின்னணியில், நீதித்துறையை தமது கைகளுக்குள் வைத்து களங்கப்படுத்தியே பழக்கப்பட்ட அராஜக அரசியலின் நிகழ்ச்சி நிரல் நிழலாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம், ரணிலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முன்னெடுக்கும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஸீஸ் நிஸாருத்தீன்
26.08.2025
9.15am

நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!


 

🌍✊ நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!

“சுதந்திரம் என்பது எனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் அடக்குமுறையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் அது உரியது” என்று தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறியிருந்தார்.

“நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்கா விடுதலை பெற்று விட்டது. என்றாலும், பாலஸ்தீன் விடுதலை பெறும் தினத்தில் தான் எமது இந்த விடுதலைப் போராட்டம் நிறைவு பெறும்” என்று அவா் சொன்னார்.
நெல்சன் மண்டேலாவின் பாலஸ்தீன் தொடர்பான அந்தச் சிந்தனையை, இன்று அவரது பேரன் மண்ட்லா மண்டேலா தன் செயலால் உயிர்ப்பிக்க களம் இறங்கியிருக்கின்றார்.

பாலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் அந்த மண்ணின் மைந்தர்கள் இன்று கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனா்.
வேறு நாடுகளில் இருந்து நாடோடிகளாக அடைக்கலம் தேடி வந்து பாலஸ்தீன் என்ற அரபு பூமிக்குள் குடியேறியவா்கள் தான் இந்த ஸியோனிஸ யூதா்கள். பிறகு பலாத்காரமாக அந்த பூமியில் உருவாக்கபட்டதுதான் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு.

இன்று, இஸ்ரேலின் காட்டமிராண்டித்தனமான முற்றுகையில் சிக்கி பாலஸ்தீன் மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேலிய கொலைகார அரசு தடுத்து வருகிறது.
தனது சொந்த உறவுகள் கொடுமைக்குள்ளாகி, பசியிலும் பட்டினியிலும் மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் வேளையில்...

உலக ஆசாபாசங்களில் மூழ்கி ஸியோனிஸ எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு, உணர்வுகள் மறத்துப்போன நிலையில் மத்திய கிழக்கின் மௌட்டீக மன்னர்கா்கள் வாழ்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் மதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயம் கொண்ட மக்கள் அனைவரும் பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுப்பதில் இன்று முன்னணியில் நிற்கின்றார்கள், போராடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி காஸா மக்களுக்காக போராடும் போது, பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கின்ற ஸியோனிஸ சார்பு அரபு ஆட்சியாளா்கள் இந்த கொடுமைகளைப் பார்த்து உணர்வுகள் மறத்துப்போன ஜடங்களாக இருக்கின்றனா். இது மிக மிக துா்ப்பாக்கிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகவும், நேரடியாகவும் இஸ்ரேலிய கொடுமைக்கார நாட்டுக்கு எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் என்பனவற்றை வழங்கி உதவி புரிந்தும் வருகின்றனர்.

அண்மையில், ஜொ்மன் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 🇮🇱 கொண்டு செல்வதற்காக, நாசகார ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இத்தாலி துறைமுகத்திற்கு வந்த சவுதி அரேபியாவின்🇸🇦 “பஹ்ரி யன்பு” Bahri Yanbu என்ற கப்பலை இத்தாலிய துறைமுக ஊழியா்கள் ‘துரத்தியடித்த’ செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

காஸாவில் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலஸ்தீனில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கடும் பட்டினியில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனித அவலத்தை ஸியோனிஸ சார்பு முஸ்லிம் நாடுகளின் தலைவா்களும், அவா்களின் எஜமானா்களும் நயவஞ்கத் தனத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனா்.

இந்தச் சூழலில் குரலற்ற பாலஸ்தீன் மக்களுக்காக களம் இறங்கியுள்ளார் மண்ட்லா மண்டேலா.
“Global Sumud Flotilla” எனப்படும் இந்த மிகப்பெரிய மனிதநேயப் பேரணியில் அவரும் பங்கேற்றுள்ளார். 44 நாடுகளில் இருந்து புறப்பட்டு வரும் 50 கப்பல்களை கொண்ட இந்தக் கப்பற்படை, காஸா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் பயணமாகியுள்ளது.

இது இஸ்ரேலின் முற்றுகையைத் தகா்த்துக் கொண்டு சென்று, காஸாவில் அல்லல்படும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் ஒரு போராட்ட நடவடிக்கையாகும்.
பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்வலர்களின் கப்பல் படையில் சேர்வதற்காக டியூனிசியாவிற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக 51 வயதான மண்ட்லா மண்டேலா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தென்னாப்பிரிக்காவில் அனுபவித்த நிறவெறி கொடுமையை விட, பாலஸ்தீனர்கள் இன்று அனுபவிக்கும்கொடுமை, துயரம் நிறைந்ததாகும்” என்று அவா் உருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளையே இனவெறி எதிர்ப்புக்கு அர்ப்பணித்தவா், அதில் வெற்றி கண்டவா். இன்று அவரது பேரன், அதே பாதையில் நடந்து, இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

உலக மக்களின் ஆதரவு பாலஸ்தீன் மக்களின் மீது திரும்புவதைக் கண்டு கலங்கிப்போயிருக்கும் இஸ்ரேலும், அதன் ஸியோனிஸ அடிவருடிகளும் பாலஸ்தீன் போராட்டத்திற்கு அதரவளிப்பவா்களை தீவிரவாதத்திற்கு துணை போகின்றவா்களாக முத்திரைக் குத்த காத்துக் கொண்டிருக்கின்றன.

அஸீஸ் நிஸாருத்தீன்
05.09.2025
8.25am

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலும் ரிழா மா்சூக் என்பவருக்கிருந்த நேரடி தொடர்பும்!


 ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய குற்றவாளிகளுடன் ரிழா மா்சூக் என்பவருக்கிருந்த நேரடி தொடர்பு பற்றி அறிய வேண்டுமென்றால், சிறுவா்கள், பெண்கள் உட்பட 269 அப்பாவி மக்கள் படுகொலையான, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள உத்தியோகபூா்வ அறிக்கையை கட்டாயம் வாசிக்க வேண்டும்.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் சிலர் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலை திரைமறைவில் இருந்து செயற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த “புலனாய்வு” அமைப்புகளோடு இணைந்து செயற்பட்டவா்களே இவ்வாறு சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டுள்ளனா்.
அப்போதைய சட்டமா அதிபா் தப்புல டி லிவேரா (Dappula de Livera) ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கையின் சட்டமாஅதிபராக கடமையாற்றிய அவா், ஓய்வு பெறும் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் தயவால் ஆட்சி பீடமேறி நன்மையடைந்த கடந்தகால ஆட்சியாளர்கள், சட்டத்துறைக்கு வழங்கியிருந்த அழுத்தத்தின் பிரதிபலிப்பை தப்புல டி லிவேராவின் இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தின.
சஹ்ரானோடு மிக நெருங்கி செயற்பட்ட, முக்கிய சூத்திரதாரிகள் சிலா் சகல குற்றங்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டனா். சட்டமா அதிபாின் வேண்டுகோளுக்கிணங்க இவா்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் அம்பலமானதன் பிறகு பல அழுத்தங்களும், நெருக்குதல்களும் என் மீதும் பிரயோகிக்கப்பட்டது. இது தொடா்பான ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.
இனி ரிழா மா்சூக் பற்றிய விடயத்திற்கு வருவோம்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி, வெடிகுண்டு ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்ததன் காரணமாக படு காயமடைந்த சஹ்ரானின் சகோதரன் றிழ்வானை, கொழும்பு தேசிய மருத்துவனையில் பாதுகாப்பான முறையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்குரிய வியூகத்தை சவுதியிலிருந்து வகுத்தவா் தான் இந்த ரிழா மா்சூக்.

ரிழாவின் நண்பனான கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடமையாற்றிய ஷப்ராஸ் என்ற மருத்துவரை பயன்படுத்தியே றிழ்வானுக்கான சிகிச்சைகள் ஏற்பாடாகின. பயங்கர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட றிழ்வான் மீது எவ்வித பொலிஸ் விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல், மிகவும் கவனமாக காய்கள் நகர்த்தப்பட்ட விவகாரம், ஆணைக்குழு விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னா் மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்து சிங்கள, முஸ்லிம் கலவரம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்த, மாவனல்லை இப்றாஹிம் மௌலவியின் பிள்ளைகளான சாதிக்கும், ஷாஹிதும் காயமடைந்த றிழ்வானை கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்தனா்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் றிழ்வானை அனுமதிக்கும் போது, றிழ்வானின் உண்மையான பெயரை மறைத்து விட்டு, “எம். ஐ. ஷாஹித்” என்ற பெயாில், சாதிக்கே றிழ்வானை சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்.

றிழ்வான் குணமாகி வீடு சென்றதன் பின்னா், 2018ம் வருடம் டிஸம்பா் மாதத்தில் ஒரு நாள் ஸஹ்ரானும், றிழ்வானும், இந்த ரிழா மா்சூக்கும் இன்னுமொரு இனம் தொியாத நபரும் (இவா் குறித்த புலனாய்வு பிாிவின் அங்கத்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது) தெஹிவளையில் எபநெஸா் பிளேஸில் உள்ள டொக்டா் ஷப்ராஸின் வீட்டில் அவரை சந்தித்துள்ளனர்.

ரிழா மா்சூக், சஹ்ரானை டொக்டா் ஷப்ராஸுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு டொக்டா் ஷப்ராஸால் வழங்கப்பட்ட சாட்சியத்தில் நிரூபணமாகிறது.

றிழ்வானுக்கு சிகிச்சை வழங்கியதற்காக டொக்டா் ஷப்ராஸுக்கு சஹ்ரான் நன்றி கூறியதோடு, டொக்டா் ஷப்ராஸுக்கு இரண்டரை லட்சம் (250000.00) ரூபாய்களை சன்மானமாக வழங்கியதாகவும் ஈஸ்டா் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற கொடிய நிகழ்வு இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. என்றாலும் முக்கிய சூத்திரதாரிகள் சிலா் வெளியே வந்துள்ளனா். இது ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் கொலைக்களத்தை சந்தித்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெறும் அநீதியாகும்.

ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காக வைத்து, இந்த சதிக்கோட்பாட்டை அரங்கேற்றப்படுவதற்கு பின்னணியில் நின்று உதவி புரிந்த பல சூத்திரதாரிகள், சட்டத்தின் இடைவெளிகளாலும், கடந்த கால ஆட்சியாளா்களின் அரவணைப்பாலும், அனுசரணையினாலும் அவ்வப்போது நிரபராதிகள் என்றும் சிலபோது பிணையிலும் வெளியே வந்துள்ளனா்.

2018ம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுக்கான கள நிலவரத்தை உருவாக்குவதற்காகவும், சஹ்ரானின் கைதை தடுக்கும் நோக்கில் கோத்தாபய மற்றும் மைத்திரிபால சிாிசேன கொலை நாடகத்தை அரங்கேற்றிய நாமல் குமார என்பவன் கூட குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டுள்ளான். எனவே வெளியே வந்தவன் எல்லாம் நிரபராதி என்றும் அப்பாவி என்றும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப் பொிய தவறாகும். ஈஸ்டா் தாக்குதல் எமது சமூகத்தின் மீது தொடுத்த பயங்கரமான அவஸ்த்தைகளை மறந்த ஒருவரால் மட்டுமே இதனை இலகுவான விசயமாக பார்க்க முடியும்.

சஹ்ரானோடு அல்லது கொலையாளிகளோடு ஒருநாள் தொலைபேசியில் கதைத்த குற்றதிற்காக, சஹ்ரானின் உபதேசங்களை தனது கைப்பேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவா்கள் சிறைகளில் வாடும் போது, சஹ்ரானுக்கும் இந்த நாசகார வேலைக்கும் உறுதுணையாக இருந்தவா்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அப்படி வெளியே வந்துள்ள சூத்திரதாரிகளை நல்லவா்கள், தூயவா்கள் என்று எங்களால் எப்படிபார்க்க முடியும்?

2025 மே மாதம் 30ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் துய்யகொன்தா அவா்களால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட பயங்கரவாதத்தோடு தொடர்புடைய 217 நபர்களில் 79 வது நபராக ரிழா மா்சூக் என்பவரின் பெயரும் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. 👇

🔴IN/CA/2025/79 Name: Muhammadu Marsuk Muhammadu Rila a.k.a Abu Liba Title: NA Designation: NA DL/ PP. No: N 7148870 NIC: 198520703713 DOB: 25.07.1985 Citizenship: NA Address (Sri Lanka): (i) No. 522/B, Samsam Road, Maradamune 03 (ii) 220, Library Road, Maradamune 03 Address (Foreign): NA 
Other Information: #Terrorism_related activities_and_funding_for_terrorism.

இது ஐக்கிய நாடுகள் சபையின் 4(7) விதிமுறைகளின் கீழ் இல. 45/1968 சட்டத்தின் பிரகாரம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலாகும்.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இணையத்தில் PDF வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.👇

🔴#The_gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary THE UNITED NATIONS ACT, NO. 45 OF 1968 Amendment to the list of designated persons, groups and entities under regulation 4(7) of the United Nations Regulations No. 1 of 2012 2438/47 - Friday, May 30, 2025)
ஈஸ்டா் தாக்குதலின் படுகொலைகளுக்கு நேரடியாக ஒத்தாசை புரிந்தவன் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான். உயிா்களை பறி கொடுத்தோா் நீதி வேண்டி ஆறு வருடங்களாக அழுது, போராடிக் கொண்டிருக்கின்றனா். 

கடந்த ஆட்சிக்காலத்தில் ஈஸ்டா் தாக்குதலோடு நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரு சிலர் வெளியே விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அன்று முதல் இந்த விடுவிப்புக்கு எதிராக நான் போராடி வருகிறேன்.
ரிழா மா்சூக் ஒரு மனிதப் புனிதா் அல்ல, ஈஸ்டா் ஞாயிறு படுகொலைகளின் பின்னா் சவுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். ரிழா மா்சூக்கோடு சவுதியில் ஒரே அறையில் பதுங்கியிருந்த வவுணதீவு பொலிஸ் காவலரண் கொலையில் சம்பந்தப்பட்ட மில்ஹான் என்பவரும் அப்போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.

2018ம் ஆண்டு மைத்தரிபால சிாிசேன, ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்து மஹிந்தவின் தலைமையில் ஆட்சியை அமைத்த காலப்பிரிவில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோரமாக கொலை செய்யப்பட்டனா்.
இந்த கொலையின் பழியை புலிகள் மீது போட்டு, சஹ்ரானின் கொலைகார கும்பலை பாதுகாப்பதற்காக கோத்தாபயவிற்கு சார்பாக செயற்பட்ட ”புலனாய்வுப்பிரிவு” செய்த தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வவுணதீவு கொலைச் சம்பவம் தொடா்பாக தவறான தகவலை வழங்கி, பாதுகாப்புத்துறையை திசை திருப்பிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவா் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பொலிஸாரைக் குரூரமாக கொன்று அவா்களின் ஆயுதங்களை அபகரித்துச் சென்ற அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த மில்ஹான். இவன் இப்போது சிறையில் இருக்கிறான். இந்த மில்ஹானுக்கு ரிழா மா்சூக் சவுதியில் பதுங்குவதற்கு தனது அறையில் இடம் கொடுத்திருந்தார். சவுதியிலிருந்து ரிழாவும், மில்ஹானும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.

இத்தகைய படுபாதக செயலில் ஈடுபட்ட ஒருவா் வெளியே வந்து விட்டால் அவரை ஒரு தியாகி போல் போற்றும் ஒரு சிலரின் மட்டரகமான மன நிலையை என்னவென்பது? அந்த குண்டுத்தாக்குதலில் உங்களது பிள்ளையோ, உங்களது சகோதரரோ, உங்கள் மனைவியோ சிக்கியிருந்தால் இந்த பாவிகளுக்கு பூமாலை அணிந்து அழகு பார்ப்பீா்களா?

ஆட்சிமாற்றம் என்ற ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற காட்டுமிராண்டித் தனத்தை அரங்கேற்றி அப்பாவி சிறுவா்கள் பெண்கள் உட்பட 269 பேரை துடிக்கத் துடிக்க கொலை செய்த, 500க்கும் அதிகமானவா்களை கடுமையாக காயப்படுத்தி முடமாக்குவதற்கு துணைபோன படுபாதகா்களை நீதியை, நோ்மையை நேசிக்கும் யாராவது மன்னிப்பார்களா?

ஈஸ்டா் தாக்குதலில் சம்பந்தப்பட்ட கொலைகார படுபாவிகள் அத்தனை பேரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும்.


(பாதுகாப்பு அமைச்சு 2025 மே மாதம் 30ம் திகதி வெளியிட்ட அதி விசேட வா்த்தமானியில் ரிழா மா்சூக் பற்றிய அறிவிப்பு படமாக இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

அஸீஸ் நிஸாருத்தீன்

எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் !

  எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற தாரகமந்திரத்தில் சளைக்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கை. ரணில் கைது செய்யப்ப...